
நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் பிரபல அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். விஜய் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாக அவரது ரசிகர்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய முயற்சிகளையும் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது கன்னியாகுமரியில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து திறந்து வைத்துள்ளனர்.
உலக சுற்றுலா தளங்களில் முக்கியமான இடமாக விளங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன், அன்னை தெரசா, ஒபாமா உள்ளிட்ட 20 முக்கிய ஜாம்பவான்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் தளபதி விஜய்யின் மெழுகு சிலையும் அமைந்துள்ளது. தமிழ் நடிகர்களில் தளபதி விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும் , ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர் .