LATEST NEWS
உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள்… இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!
பொதுவாக சினிமாவில் கற்பனை கதைகள் மட்டுமல்லாமல் நிஜ கதைகளிலும் கற்பனைகளை புகுத்தி வித்தியாசமான திரைக்கதைகளை கொண்டு பல வெற்றி பெற்ற திரைப்படங்கள் உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களும் புத்தகங்கள் மற்றும் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்களை இயக்கியுள்ளனர். முன்னணி இயக்குனர்கள் பலரும் இவ்வாறான திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி தமிழில் உண்மை கதையை கொண்டு இயக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காதல்:
கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் இரண்டு பேருக்கு இடையே இருக்கும் காதலை தாண்டி ஜாதி பிரச்சனையை குறித்து விவரித்தது. அந்த திரைப்படத்தில் இறுதியாக நாயகன் பரத் பைத்தியமாக மாறும் காட்சியை இயக்குனர் பாலாஜி சக்திவேல் மிகவும் தத்ரூபமாக இயக்கி இருப்பார். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான்.
கல்லூரி:
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது. இது தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம். அரசியலில் தங்கள் தரப்பு எதிர்ப்பை தெரிவிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு செயல் எப்படி பல கனவுகளோடு கல்லூரிக்கு படிக்க சென்ற கல்லூரி மாணவர்களின் கனவை கலைத்தது என்பதுதான் இந்த படத்தின் மையக் கருத்து.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்:
ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. பாலாஜி தரணிதரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
வழக்கு எண் 18/9:
கல்லூரி மற்றும் காதல் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய மற்றொரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் தான் இது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு செய்தி அதன் பின்னணியில் இருக்கும் உண்மையை உரக்க சொன்ன திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த உலகில் பணம் இருந்தால் எப்படிப்பட்ட குற்றத்தை செய்து விட்டோம் அதிலிருந்து தப்பித்து விடலாம் என்பதை கொண்டதுதான் இந்த திரைப்படம்.
பரதேசி:
பாலாவின் இயக்கத்தில் எரியும் பனிக்காடு என்ற நாவலை தழுவி வெளியான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் தான் பரதேசி. தான் செய்த வேலைக்கு கூலியை கூட பெறாவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது அங்கிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற மக்களின் மனநிலையை இந்த திரைப்படத்தில் பாலா பதிவு செய்திருப்பார். இந்த திரைப்படம் தேசிய விருதுகளை பெற்றது.
விசாரணை:
பொதுவாகவே திரைப்படங்களின் காவலர் என்றால் நல்லவராகவும் நேர்மையானவராகவும் பார்த்து பழகிய நமக்கு இந்த திரைப்படம் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியது. லாக்கப் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் காவலர்களின் வன்முறையை உள்ளடக்கி இருந்தது. இந்த திரைப்படம் தேசிய விருது வென்றது மட்டுமல்லாமல் ஆஸ்கர் வரை சென்ற திரைப்படமாகும்.
பிச்சைக்காரன்:
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 900 கோடிக்கு வாரிசாக இருந்தும் தன்னுடைய அம்மாவை குணமாக 48 நாட்கள் பணக்காரன் என்ற அடையாளம் இல்லாமல் பிச்சைக்காரனாக விஜய் ஆண்டனி நடித்திருப்பார். இது ஒரு உண்மை கதையை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
மேற்கு தொடர்ச்சி மலை:
2016ஆம் ஆண்டு எண்பது சதவீதம் புதுமுக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் அன்றாட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக படும் துயரத்தையும் கண் முன் காட்சிப்படுத்தியது. இயக்குனர் லெனின் பாரதி இயக்கிய இந்த திரைப்படம் உண்மை கதையில் இருந்து படமாக்கப்பட்டது.
தீரன் அதிகாரம் ஒன்று:
கார்த்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உண்மையாகவே தமிழக போலீசார் செய்த ஆப்ரேஷனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பவர்களை பதற வைத்தாலும் ஒரு உண்மை சம்பவத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
அசுரன்:
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வெக்கை நாவலில் சொல்லப்பட்ட உண்மை கதையை தழுவி படமாக எடுக்கப்பட்டது. தன்னுடைய பிள்ளைகளுக்காக தன்மானத்தை விட்டுக் கொடுக்கும் தந்தையாக தனுஷ் நடிக்க, மூத்த மகன் உயிரிழந்த துக்கத்தில் இருக்க தனது அண்ணனின் மரணத்திற்காக பழிவாங்க துடிக்கும் இளைய மகனின் கோபம் என பரபரப்பான காட்சிகள் இடம் பெற்று. இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது.
சூரரை போற்று:
பொதுவாக சாமானியன் பறக்க நினைப்பதை மிகவும் கடினமான பயணம்தான். ஆனால் ஒருவன் மொத்த சாமானியர்களையும் பறக்க வைக்க விரும்புகின்றான். இதனை கதையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் சூரரைப் போற்று திரைப்படம். விமான சேவை பணக்கார மக்களுக்கு தானா என்ற கேள்வியை மனதில் எழுப்பிய திரைப்படம் தான் இது. பல விருதுகளைப் பெற்ற இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது .
ஜெய் பீம்:
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த திரைப்படம் 1993 ஆம் ஆண்டு நடந்த நிஜ வாழ்க்கை சம்பவத்தை இயக்குனர் ஞானவேல் இந்த திரைப்படத்தில் கூறியிருப்பார்.
