LATEST NEWS
அரசு ரகசியங்கள் கசிகிறதா..? அமைச்சரவைக் கூட்டத்தில் தனியார் நபர்கள் பங்கேற்பா…? டிஜிபி அலுவலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் புகார் மனு..!!!
தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களில், எந்தவொரு அரசுப் பதவியோ அல்லது சட்டப்பூர்வப் பொறுப்போ இல்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய தனியார் நபர்கள் பங்கேற்பதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தற்போதைய முதலமைச்சர் விஜய் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்ற நிலையில், அரசுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத இந்த இரு நபர்களுக்கும் அரசின் முக்கியத் தகவல்களையும் நடவடிக்கைகளையும் தெரியப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்குத் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அரசின் அனைத்து முக்கியக் கூட்டங்களிலும் இவர்கள் கலந்து கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு விவகாரங்களில் தனியார் நபர்களை அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அதற்கு வழிவகை செய்த முதலமைச்சர் விஜய் மீதும் காவல்துறை தலைமை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை காவல்துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றம் வாயிலாக சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதியைப் பெறுவோம் என்றும் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
