LATEST NEWS
ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை உயர்வு…! மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையா…? மத்திய அரசை கண்டித்து செல்வபெருந்தகை அதிரடி பதிவு…!!
பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென 29 ரூபாய் உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி விலை உயர்வுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மூலமாகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தற்போதைய சூழலில் தேச மக்கள் ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் பெரும் பொருளாதார நெருக்கடிகளால் தவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையை ஏற்றியிருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். “அச்சே தின்” (நல்ல காலம் வரும்) என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி மத்தியில் அரியணை ஏறியவர்கள், இன்று சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் நரகமாக்கியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அநியாயமான சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு சற்றும் தாமதிக்காமல் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
