LATEST NEWS
பணம், கார் இருந்தாலும் மரியாதை இல்லை…யூடியூபரில் இருந்து அமைச்சர் நாற்காலி வரை…இப்போதான் எல்லாரும் கும்பிடுறாங்க…அப்துல் கலாம் பிறந்த மண்ணில் புதிய அதிரடி! தவெக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட மாஸ் பிளான்…!
புட் சட்னி யூடியூப் சேனல் மூலம் மக்களிடையே பிரபலமாகி, பின்னர் ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படத்தை இயக்கியவர் ராஜ்மோகன். சன் டிவி, விஜய் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற பேச்சாளராகவும் தன் திறமையை வெளிப்படுத்திய இவர், தமிழக அரசியல் களம் நோக்கி நகர்ந்தார். நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த ராஜ்மோகன், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி மற்றும் சினிமா துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஒரு சாதாரண யூடியூபராக இருந்து இன்று மாண்புமிகு அமைச்சராக உயர்ந்துள்ள இவரை, தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற கல்வி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகனின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. அந்த விழாவில் பேசிய அவர், “சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, யூடியூபில் கடுமையாகப் போராடி எனக்கான ஒரு இடத்தை உருவாக்கினேன். அதன் மூலம் பணமும், வீடும், காரும் சம்பாதித்துவிட்டேன். ஆனால், எனக்கு உண்மையான மரியாதை இப்போதுதான் கிடைத்துள்ளது. அதற்குப் பெருந்தகை முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் காரணம். என்னை ‘மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன்’ என்று அவர் ஆக்கிய பிறகுதான், செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்; பள்ளிக் குழந்தைகள் என்னை அவர்களின் சொந்த மாமாவைப் போலப் பார்க்கிறார்கள். இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பள்ளி மாணவர்களின் நலன் குறித்துப் பேசிய அவர், குழந்தைகள் தமக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளில் உடற்கல்வி (PET) பாடவேளைகள் ரத்து செய்யப்படுவது குறித்துப் புகாரளிப்பதாகக் குறிப்பிட்டார். “குழந்தைகள் எவ்வளவு படிக்கிறார்களோ, அந்த அளவுக்கு விளையாடவும் வேண்டும். எனவே பள்ளிகளில் PET பீரியடை கட் பண்ணக் கூடாது. ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கே ஏ.பி.ஜே. அப்துல் கலாமைத் தந்தது நமது மாநிலம்தான். குழந்தைகளுக்கு ஏற்ற கல்விச் சூழலை நாம் இன்னும் எளிதாக்கப் போகிறோம்; நிச்சயம் உங்கள் பள்ளிகளில் இருந்தும் நாளை அப்துல் கலாம்கள் உருவாவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார். வரும் ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில், ராஜ்மோகனின் இந்தப் பேச்சு தவெகவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
