CINEMA
திரையுலகில் சாதிப்பேன் என்று கூறினாள், ஆனால்…மன அழுத்தம் கொடுத்த மரணம்…ஜனவரி மாதத்தில் இருந்தே அந்தப் பிரச்சனை…மரணத்திற்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ… பாலிவுட் நடிகை சஞ்சிதா உகலே தற்கொலையின் பின்னணி…!
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான 22 வயது சஞ்சிதா உகலே, நளசோபரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து சஞ்சிதாவின் சடலத்தைக் கைப்பற்றினர். அங்கு தற்கொலை கடிதம் எதுவும் சிக்காத நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ (Chhaava) மற்றும் மனோஜ் பாஜ்பாயின் ‘சைலன்ஸ் 2’ ஆகிய படங்களில் நடித்துள்ள சஞ்சிதா, படவாய்ப்புகள் இல்லாததாலும், கடுமையான மன அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஞ்சிதாவின் திடீர் மரணம் குறித்து அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான மேகா சர்மா கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். “இந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை, என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சஞ்சிதாவுக்குச் சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததால், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே கடுமையான மன அழுத்தத்திற்காகச் சிகிச்சை பெற்று வந்தாள். ஆனால், அவள் எப்போதுமே கலகலப்பாக இருக்கக்கூடியவள். 10 நாட்களுக்கு முன்பு கூட அவளை ஒரு ஆடிஷனுக்கு நான் அழைத்துச் சென்றேன். இந்தத் திரையுலகில் நிச்சயம் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தவள், கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” என மேகா சர்மா வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சஞ்சிதா தற்கொலை செய்து கொள்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புதான், இன்ஸ்டாகிராமில் ‘டஃப்லி வாலே’ என்ற பிரபலமான இந்திப் பாடலுக்குத் துள்ளலாகப் பாடி எக்ஸ்பிரஷன் கொடுக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். சோசியல் மீடியாவில் இவ்வளவு கலகலப்பாக வீடியோ வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதை அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் நம்ப முடியவில்லை. “இவ்வளவு துடிப்புடன் வீடியோ வெளியிட்டுவிட்டு, எப்படி இப்படி ஒரு முடிவை எடுக்க முடியும்?” என்று அதிர்ச்சியூட்டும் கேள்விகளுடன் இந்த வீடியோ இப்போது இணையத்தில் சோகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
