CRIME
“எனக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ணுனீங்க… ஆனால் நான் தோத்துட்டேன்ப்பா..” நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை… நாடே அதிர்ச்சியில்.!!
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா சாங்லே என்ற மாணவி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் அங்கிதா 166 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவக் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மாணவி, நேற்று முன் தினம் மாலை தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடத்திலிருந்து காவல்துறையினர் கைப்பற்றிய அங்கிதாவின் தற்கொலை கடிதம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. அதில், “நான் நீட் தேர்வுக்குப் படித்தபோது எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தீர்கள், ஆனால் உங்களின் ஒரு ஆசையைக் கூட என்னால் நிறைவேற்ற முடியாமல் தோற்றுவிட்டேன்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். மேலும், தனது தற்கொலைக்கு குடும்பத்தினர் யாரும் பொறுப்பல்ல என்று குறிப்பிட்ட அவர், தனது அண்ணனிடம் அம்மா மற்றும் அப்பாவை எந்தக் குறையும் வராமல் நன்றாகப் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாண்டு வினாத்தாள் கசிவு காரணமாக முதலில் நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தொடர் குளறுபடிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இத்தகைய தேர்வு முறைகேடுகளைத் தடுக்கத் தவறிய நிர்வாகத் தோல்விக்கு பொறுப்பேற்று, டெல்லியில் இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்துள்ளார்.
