CRIME
நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..! 30 வயது பெண்ணின் ஆடையைக் கிழித்து, மொட்டையடித்து, முகம் கறுப்பாக்கி… செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கூட்டிச்சென்ற உறவினர்கள்.. நடந்தது என்ன..?
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே, 30 வயது திருமணமான பெண் ஒருவர் அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடந்த இந்த அநாகரிகச் செயலில், அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, முகம் கறுப்பாக்கப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. அதோடு நிற்காமல், அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் வெறித்தனமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் குடும்பத் தகராறு மற்றும் பழிவாங்கும் பின்னணியைக் காவல்துறை கண்டறிந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து வேறொரு இளைஞருடன் வாழத் தொடங்கியுள்ளார். பின்னர் அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடரப்பட்டு அவர் சிறைக்குச் சென்றார். ஆனால், அவர் அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த பிறகு, அந்தப் பெண் மீண்டும் அவருடனேயே வாழ முடிவு செய்துள்ளார். வன்புணர்வு செய்த நபருடனேயே அந்தப் பெண் மீண்டும் வாழத் தொடங்கியது அவரது உறவினர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியதே இந்த வெறிச்செயலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் புதன்கிழமை அன்று வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்ணை அவமானப்படுத்திய அவரது கணவரின் தந்தை உட்பட 11 பேர் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், மானபங்கம் செய்தல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் ஜர்தா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
