LATEST NEWS
“எனக்கு எதுக்குமா?”.. முதல் சம்பளத்தில் மகள் கொடுத்த பரிசைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த தாய்..! வைரல் வீடியோ..!!
பெற்றோர்களின் தியாகங்களுக்கு இந்த உலகத்தில் ஈடு இணையே இல்லை. அந்த வகையில், தனது கனவுகளை நனவாக்க நான்கு வருடங்களுக்கு முன்பு ஜெர்மனிக்குச் சென்ற வான்ஷிகா என்ற இளம்பெண், தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு மறக்க முடியாத ஒரு பரிசை வழங்க வேண்டும் என உறுதியாக இருந்தார். தனது கல்வி மற்றும் லட்சியங்களுக்காக பல தியாகங்களை செய்த தனது தாயை ஒரு ராணியைப் போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த மகளின் நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது.
தன்னுடைய முதல் வருமானத்தை சிறுகச் சிறுக சேமித்த வான்ஷிகா, தனது தாய்க்கு யாருமே எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். தாயிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஜெர்மனியில் இருந்து அவருக்குக் கொண்டு வர தன்னிடம் எதுவும் இல்லை என்று முதலில் நகைச்சுவையாகக் கூறினார். ஆனால் அடுத்த கணமே, தன் பின்னால் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள் அடங்கிய பெட்டியை அம்மாவிடம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்தார். இந்த விலைமதிப்பற்ற பரிசை சற்றும் எதிர்பாராத அந்தத் தாய், நம்ப முடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்து தன் மகளைக் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
தாயும் மகளும் அன்பைப் பகிர்ந்துகொள்ளும் இந்த உணர்ச்சிகரமான தருணம் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த வீடியோ கடந்துள்ளது. “ஒவ்வொரு மகளின் மிகப்பெரிய கனவும் தன் பெற்றோருக்கு இதுபோல கொடுப்பதுதான்” என்றும், “பெற்றோரை பெருமைப்படுத்துவதை விடச் சிறந்த உணர்வு வேறு எதுவும் உலகத்தில் இல்லை” என்றும் நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துக்களைப் பதிவிட்டு வான்ஷிகாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
