LATEST NEWS
அடேங்கப்பா… என்ன ஒரு தில்லு..! ஆயிரக்கணக்கான தேனீக்கள் மத்தியிலும் அசராத கரடி… பின்னணியில் இருக்கும் ரகசியம்.. என்ன தெரியுமா..!!
சமூக வலைதளங்களில் காடுகள் மற்றும் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மரத்தின் உயரமான கிளையில் ஏறி, தேனீக்களின் பெரிய கூட்டில் இருந்து ஸ்லோத் கரடி ஒன்று மிகவும் நிதானமாகத் தேன் சாப்பிடும் அரிய வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கரடியைச் சுற்றி ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஆக்ரோஷமாக மொய்த்துக் கொண்டு தாக்குகின்றன. இருப்பினும், அந்த கரடி எந்தவொரு பயமும் பதற்றமும் இன்றி, தன் உணவை ரசித்து உண்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறது.
இந்த வீடியோவை உத்தரகாண்ட் அரசின் மூத்த வனத்துறை அதிகாரியான டாக்டர் பி.எம். தகாத்தே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாக மனிதர்களோ அல்லது மற்ற விலங்குகளோ தேன்கூட்டின் அருகே சென்றால் தேனீக்கள் கொடூரமாகக் கொட்டித் தீர்த்துவிடும். ஆனால், இந்தக் கரடிக்கு மட்டும் எப்படி வலி ஏற்படுவதில்லை என்ற கேள்விக்கு அவர் விளக்கமளித்துள்ளார். பல இலட்சம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் காரணமாக, இயற்கையே இந்தக் கரடிகளுக்குத் தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில சிறப்பான உடலமைப்பைக் கொடையாகக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரடியின் உடல் முழுவதும் மிகவும் அடர்த்தியான மற்றும் தடிமனான முடிகள் நிறைந்துள்ளன. இந்த முடிகள் தேனீக்களின் கொடுக்குகள் கரடியின் தோலைத் தொடாதவாறு ஒரு கவசம் போலப் பாதுகாக்கின்றன. ஒருவேளை சில தேனீக்கள் தப்பித்தவறி கொட்டினாலும், அதன் தடிமனான தோல் அந்த வலியைப் பெருமளவில் கட்டுப்படுத்திவிடுகிறது. மேலும், கரடிகளால் தங்களின் மூக்குத் துவாரங்களை தேவைப்படும்போது முழுமையாக மூடிக்கொள்ள முடியும் என்பதால், தேனீக்கள் அதன் மூச்சுக்குழாய்க்குள் நுழைய முடியாது. கரடிகள் வெறும் தேனுக்காக மட்டும் இந்த ஆபத்தை எதிர்கொள்வதில்லை; தேன்கூட்டில் இருக்கும் லார்வாக்கள் அவற்றிற்குத் தேவையான புரதச்சத்தை வழங்குவதால், தேனீக்களின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் அவை கூட்டை உடைத்துச் சாப்பிடுகின்றன.
