LATEST NEWS
“இருவரையும் காவலில் வைக்க அவசியமில்லை!” தவெக MLA குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜிக்கு வெற்றி… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ ஒருவரிடம் ₹35 கோடி கொடுத்து குதிரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் தற்போதைய தவெக அரசைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவராகச் செந்தில் பாலாஜியின் பெயர் நேரடியாகச் சேர்க்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரையும் காவல் துறையின் காவலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று நீதியரசர் தனது தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கடுமையான நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்துள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்னிலையில் தினந்தோறும் ஆஜராகி தங்களின் கையெழுத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், காவல் துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக மற்றும் திமுக இடையே நிலவி வரும் அரசியல் குதிரை பேர விவகாரத்தில், உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த முன்ஜாமீன் உத்தரவு திமுக தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
