LATEST NEWS
கருணாநிதி செஞ்ச தப்பு தான்… இப்போ தமிழ்நாட்டுக்கு தண்ணி தர மாட்டேங்குறாங்க… மேகதாது அணை விவகாரத்தில் கொந்தளித்த அமைச்சர் நிர்மல் குமார்…!!
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், மின்சாரத் துறையில் கட்டண உயர்வு எனத் தவறான தகவலை திமுக தலைவர் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டினார். வாட்ஸ்அப் செய்திகளை வைத்துக்கொண்டு தெளிவில்லாமல் பேசும் அவர், தங்களைத் தொடர்பு கொண்டால் விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மின் கட்டண ஆய்வில் 50 புகார்களில் மட்டுமே மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மாதாந்திர மின் கணக்கீட்டிற்குப் புதிய பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு, டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய அவர், கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்த அரசு அமைந்தாலும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுப்பதுதான் அவர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது என்றார். இதில் மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது என்றும், ஒன்றிய அரசும் உச்சநீதிமன்றமும் மட்டுமே இதற்கான தீர்வைக் காண முடியும் என்றும் தெளிவுபடுத்தினார். மேகதாது விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த தவறுதான் தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதும் செய்யாத அன்புமணி ராமதாஸ், இப்போது ராகுல் காந்தி சொன்னால் தண்ணீர் வந்துவிடும் என்று பேசுவதைச் சுட்டிக்காட்டி அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது தெளிவில்லாமல் யாரோ சொல்வதைக் கேட்டு கையெழுத்து போட்டுச் செயல்பட்டார் என்றும், கடந்த ஆட்சிக் காலத்தில் 543 பேர் மட்டுமே பணியமர்த்தப்பட்ட நிலையில், தற்போதைய அரசு விரைவில் புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
