LATEST NEWS
ரூ.10,000 கொடுத்தாலும் திமுக டெபாசிட் இழக்கும்… எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் இனி எங்களுடன் தான்… ஆதவ் அர்ஜுனா அதிரடி சவால்..!!
மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, வரவிருக்கும் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு 10,000 ரூபாய் கொடுத்தாலும் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். த.வெ.க. காணாமல் போகும் என்று கூறியவர்களே தற்போது காணாமல் போய்விட்டதாகவும், தங்களது கட்சியின் வெற்றி என்பது தமிழக பெண்களின் வெற்றி என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெறும் இன்ஸ்டாகிராமை வைத்தே தி.மு.க.வை முடித்துவிட்டதாகக் கூறிய அவர், த.வெ.க. ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சாடிய ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி தொகுதியில் த.வெ.க. போட்டியிட்டிருந்தால் பழனிசாமியும் தோல்வி அடைந்திருப்பார் என்றும், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரையே தற்போது மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அவர் நிறுத்தியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலில் தி.மு.க.வால் கள்ள ஓட்டு போட முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு துறைகளில் தி.மு.க. ஊழல் செய்யவில்லை என கம்யூனிஸ்டுகளால் சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய இடைத்தேர்தலிலும் தாங்கள் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம் என்ற நிலையைத் தெளிவுபடுத்திய அவர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் தற்போது த.வெ.க.வில் இணைந்து வருவதாகக் கூறினார். இந்த மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் த.வெ.க.வின் முதலமைச்சர் விஜய் இரண்டு நாட்கள் தீவிர பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தனது உரையில் அறிவித்துள்ளார்.
