CRIME
“பள்ளியா? கொடுமைக்கார கூடாரமா..?” மாணவிகளை கழிவறை கழுவ வைத்த தலைமை ஆசிரியைக்கு விழுந்த ‘அடி’… கோவையில் பரபரப்பு..!!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு பழங்குடியினர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் முறையாக வராததால், மாணவிகளை அவர் இப்பணியில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இத்துடன், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக, தலைமை ஆசிரியை குச்சியால் கொடூரமாகத் தாக்கியதில் அந்த மாணவியின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நலக் குழுவினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மாணவர்களைக் கல்வி சாராத வேலைகளில் ஈடுபடுத்தியதும், உடல்ரீதியாகத் தாக்கியதும் உறுதி செய்யப்பட்டதால், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி இந்த சஸ்பெண்ட் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
