CRIME
“அவமானத்திற்கு பயந்து கொடூரம்” மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி, பார்வையற்ற மகளைக் கொன்று சாக்கில் கட்டிய கணவன்.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், சமூக அவமதிப்புக்கு பயந்து மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் பார்வையற்ற மகளைக் கணவனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரஸரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சராய் பாரதி முஸ்தபாபாத் கிராமத்தைச் சேர்ந்த ராம்சீஜ் என்பவரே இந்த இரட்டைக் கொலையைச் செய்த முக்கியக் குற்றவாளி ஆவார். இவரது மனைவி மாந்தி தேவி மனநலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி ஆடைகளின்றி வீட்டை விட்டு வெளியே சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்; இவர்களது மகள் கௌரி பிறவியிலேயே கண்பார்வையற்றவர் ஆவார்.
தங்கள் குடும்பத்தின் இந்த நிலையால் சமுதாயத்தில் தனக்குத் தொடர் அவமானமும், அசிங்கமும் ஏற்படுவதாக ராம்சீஜ் எண்ணியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து முதலில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர், கண்பார்வையற்ற தனது மகளையும் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலை ஒரு சாக்குப்பையில் மூட்டையாகக் கட்டி அருகில் இருந்த நெல் வயலில் வீசியுள்ளார். செப்டம்பர் 17 அன்று வீட்டில் மனைவியின் சடலமும், வயலில் மகளின் சடலமும் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இக்கொடூரம் அம்பலமானது.
கொலைக்குப் பிறகு வீட்டில் சிந்தியிருந்த ரத்தக் கறைகளைச் சுத்தம் செய்துவிட்டு, உடல்களை யாருக்கும் தெரியாமல் எரிப்பதற்காக மூங்கில்களையும் ராம்சீஜ் வெட்டித் தயார் செய்து வைத்துள்ளார். ஆனால், அதற்குள் ரகசியத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், தப்பியோட முயன்ற கொலையாளி ராம்சீஜ் மற்றும் அவனது கூட்டாளிகளான சந்தன், தினேஷ் ஆகிய மூவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
