LATEST NEWS
“600 ஆண்டு கால கொடூர ரகசியம் அம்பலம்” மாடு திருடிய பெண்ணுக்கு மூக்கை அறுத்த பண்டைய சீனா… இறந்த பிறகும் குப்புறப் புதைத்த கொடூரம்..!!
பண்டைய சீனாவில் கால்நடைகளைத் திருடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மிகக் கொடூரமான ‘மூக்கறுப்பு’ தண்டனைக்கான முதல் நேரடி வரலாற்று ஆதாரத்தை அமெரிக்க மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. வரலாறுகளில் மட்டுமே பதிவாகியிருந்த இத்தண்டனையை, தற்போது கண்டறியப்பட்டுள்ள சுமார் 600 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் மண்டையோடு நிரூபித்துள்ளது. கார்பன் டேட்டிங் சோதனையில் அந்தப் பெண் கி.பி. 1298 முதல் 1404 ஆம் ஆண்டிற்குள் வாழ்ந்தவர் என்பதும், அவரது மூக்குப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் திட்டமிட்டு வெட்டி எறியப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பண்டைய சீனாவின் ஷியா வம்ச சட்டப் புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள ‘ஐந்து கடுமையான உடல் சிதைப்புத் தண்டனைகளில்’ ஒன்றான ‘இடி’ (Yi) எனப்படும் மூக்கை அறுக்கும் தண்டனை, மாடு போன்ற விலைமதிப்பற்ற கால்நடைகளைத் திருடுபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அன்றைய காலத்து மோசமான மருத்துவ வசதிகளையும் மீறி, மூக்கு அறுக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தப்போக்கு மற்றும் தொற்றுகளிலிருந்து காப்பாற்றப்பட்டு, 40 முதல் 45 வயது வரை பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார். இந்த வடுக்களை மறைப்பதற்காக அவர் மரத்தாலான செயற்கை மூக்கைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இருப்பினும், மூக்கு அறுக்கப்பட்ட அந்தப் பெண் இறக்கும் வரையிலும், அதற்குப் பிறகும் சமூகத்தால் ஒரு குற்றவாளியாகவே பார்க்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்ற எலும்புக்கூடுகள் சாதாரணமாகப் புதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வினோதப் பெண்ணின் உடல் மட்டும் முகம் தரையை நோக்கியவாறு குப்புறப் புதைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் உயிரோடு இருந்தபோது மட்டுமின்றி, இறந்த பிறகும் அவர் ஒரு அவமானத்தின் அடையாளமாகவே நடத்தப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
