LATEST NEWS
“இனி அது சரிப்பட்டு வராது”… மேடையை காலி பண்ணுங்க, வீடு வீடா போங்கப்பா… உதயநிதியின் அதிரடி உத்தரவால் அதிரும் திமுக உடன்பிறப்புகள்..!!
தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, தற்பொழுது பரிசீலனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் , நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, தேர்தல் களம் ஒரு பன்முனைப் போட்டியாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் தங்களது முழு பலத்தையும் காட்டி வருகின்றன. குறிப்பாக, திமுக தரப்பு மதுராந்தகம் தொகுதியைக் குறிவைத்துக் கூடுதல் கவனம் செலுத்தி வரும் வேளையில், அதிமுக தரப்போ தாராபுரம் தொகுதியைக் கைப்பற்றத் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. புதிதாகக் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தவெக-வை இந்த இடைத்தேர்தலில் வீழ்த்துவதன் மூலம், அக்கட்சியின் அரசியல் பிம்பத்தைச் ஆரம்பத்திலேயே உடைக்க முடியும் என்ற கணக்கோடு இரு திராவிடக் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன.
மதுராந்தகம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட திமுகவின் உள்கட்சி கருத்துக்கணிப்பின்படி, அங்கு கடுமையான உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு புதிய அதிரடி வியூகத்தை வகுத்துள்ளார். அதன்படி, மதுராந்தகம் தொகுதி ஒட்டுமொத்தமாக 7 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அங்கு நியமிக்கப்பட உள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இளைஞரணித் தோழர்கள் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்முறை வழக்கமான மேடைப் பிரச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று வீடு வீடாக வாக்குச் சேகரிக்கும் தனித்துவமான தேர்தல் வியூகத்தை உதயநிதி ஸ்டாலின் வகுத்துள்ளார். மறுபுறம், மதுராந்தகத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு சில இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், விஜய்யின் ஒருநாள் அதிரடிப் பிரச்சாரம் அதனைச் சரிசெய்துவிடும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர். எனினும், திமுக, அதிமுக, சீமான் மற்றும் கம்யூனிஸ்ட்கள் என ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களின் வியூகங்களையும் எதிர்த்து தவெக இந்த இடைத்தேர்தலில் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
