LATEST NEWS
ச்ச தோழரே..! நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல.. நாங்க வேட்பாளரை நிறுத்தியிருக்கமாட்டோமே… கம்யூனிஸ்டுகளுக்கு சீமான் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’ ஆதரவு..!!
அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முடிவை அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தால் நாதக வேட்பாளர்களை நிறுத்தாமல் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்திருப்போம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் தீய ஆட்சி முறைகளுக்கு இவ்வளவு காலம் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் துணையாக இருந்தது வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், தங்களுக்குப் புரட்சிகரமான மற்றும் சோசலிச சிந்தனைகளை விதைத்ததே கம்யூனிச இயக்கங்கள் தான் என்றும் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார்
தற்போது இந்த இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட்கள் என 5 முனைப் போட்டி அதிகாரப்பூர்வமாக நிலவி வருகிறது. நாதக சார்பாக தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமனும் களம் காண்கின்றனர். அதே வேளையில், மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பாக சுகந்தியும், தாராபுரத்தில் சிபிஐ சார்பாக லட்சுமணனும் தனித்துப் போட்டியிடுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-வின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்திருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கியுள்ளது தேர்தல் களத்தில் யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விவாதத்தை எழச்செய்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் கட்சி மாறுபவர்கள் மீதும், இடைத்தேர்தல் அரசியல் மீதும் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று அவர் சாடினார். ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தோராயமாக 50 கோடி ரூபாய் வரை மக்கள் பணம் செலவழிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆளுங்கட்சியில் இருந்தால் மட்டுமே தொகுதிக்கு சேவை செய்ய முடியும் என்ற தவறான பிம்பத்தை உருவாக்குவது ஜனநாயகத்திற்குப் பெரும் ஆபத்தானது என்று எச்சரித்தார் .
இந்த அவல நிலையை மாற்ற கடுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். சுயநலப் பதவிக்காகவும், சுய லாபத்திற்காகவும் கட்சி மாறுபவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும், அல்லது அந்த இடைத்தேர்தலுக்குச் செலவாகும் 50 கோடி ரூபாய் பணத்தை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்ற அதிரடி விதியை அமல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சீமானின் இந்தத் திடீர் கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடும், சட்டத்திருத்தக் கோரிக்கையும் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
