LATEST NEWS
“13.5 லட்சம் கோடி கடன் இருக்கு… இப்போ புது தலைமைச் செயலகம் தேவையா..?” சீமான் அதிரடி கேள்வி..!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன் வாங்கி, வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்கு புதிய தலைமைச் செயலகம்? தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் பல மேதைகள் அமர்ந்து ஆகச்சிறந்த சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டியிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ஒருவேளை தலைமைச் செயலகத்துக்கு அவசியம் ஏற்பட்டால் கருணாநிதி கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் கட்டிடத்தை பயன்படுத்தலாம் என்றும், அதற்காக மருத்துவமனையை வேண்டுமானால் வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் கூறினார். அதேவேளையில், புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி கருத்து குறித்துப் பேசிய சீமான், நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தது ஒரு பொதுவான கருத்து என்று கூறினார். அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பிருந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றும், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் தம்பி விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
