LATEST NEWS
விவாகரத்து வரை சென்ற 4 மாத திருமணம்… காவல் நிலையத்தில் தம்பதிக்கு நடந்த அந்த ஒரு ‘மேஜிக்’.. .. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரைச் சேர்ந்த தம்பதியினர் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு, விவாகரத்து வரை சென்ற நிலையில், மனைவியின் வயிற்றில் வளரும் ஒரு குட்டி உயிர் அந்தப் பிரிவைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்களுக்குத் திருமணமாகி வெறும் 4 மாதங்களே ஆன நிலையில், சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்தத் தகராறு நாளுக்கு நாள் முற்றி, பஞ்சாயத்து தாண்டி காவல் நிலையம் வரை சென்றது. காவல் நிலையத்தின் சமரச தீர்வு மையத்தில் மூன்று முறை கவுன்சிலிங் நடத்தப்பட்ட போதிலும், கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்வதிலேயே பிடிவாதமாக இருந்துள்ளனர்.
ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், அவர்களின் முடிவில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. நேற்று வரை உறவை முறித்துக் கொண்டு தனித்தனியாக வாழ வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற தம்பதியினர், இன்று தங்களின் வயிற்றில் வளரும் அந்தச் சிறு உயிருக்காகத் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைந்து வாழச் சம்மதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சமரச தீர்வு மையத்தின் பொறுப்பாளர் அல்கா சௌத்ரி முன்னிலையில் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் மீண்டும் தங்களது இல்லத்திற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
