LATEST NEWS
“மாணவர் பாரதிதாசனுக்கு ₹48 லட்சம் கொடுத்தாச்சு” அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த சதி.. பொய் புகாரை ஆதாரங்களுடன் உடைத்து சமூகநீதித் துறை அதிரடி விளக்கம்,,!
அயலகக் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக மாணவர் ஒருவர் தெரிவித்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் சமூகநலன் மற்றும் சமூகநீதித் துறை தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் இந்த நிதியுதவி திட்டத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்பதைத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் புகாரளித்த மாணவர் பாரதிதாசனுக்கு, அவர் வெளிநாட்டில் பயிலும் முதலாமாண்டு படிப்பிற்காக ₹36 லட்சமும், இரண்டாமாண்டு படிப்பிற்காக ₹12 லட்சமும் என மொத்தம் ₹48 லட்சம் கல்வி உதவித்தொகையாக ஏற்கனவே முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக அரசுத் துறைத் தரப்பில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி வழங்கப்படவில்லை என்று மாணவர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டு இதன் மூலம் மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாணவருக்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்ற தகவலின் அடிப்படையில், அவருக்கு ஆதரவாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்களின் தலையீட்டால் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தற்போது சமூகநீதித் துறை வெளியிட்டுள்ள இந்தத் தெளிவான விளக்கம் இச்சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
