LATEST NEWS
வெட்கமா இல்லையா.? டெல்லிக்கு பயந்து நடுங்கி… நீதிபதி குரியன் ஜோசப் குழுவுக்கு மூடுவிழா..? தவெக அரசை கிழித்தெடுத்த உதயநிதி..!!
மாநில உரிமைகள் குறித்துப் பேசவும் போராடவும் பயப்படும் தமிழக வெற்றிக் கழக அரசு, அது தொடர்பாக ஆய்வு செய்யவும் பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த நேரடித் தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவாக ஆராய்வதற்காக, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாநில தன்னாட்சி மற்றும் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க உருவாக்கப்பட்ட இந்தக் குழுவின் செயல்பாடுகளைத் தவெக அரசு தற்போது திட்டமிட்டு முடக்கியுள்ளதாகத் தனது சமூக வலைதளப் பதிவில் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் கூட்டாட்சித் தத்துவ உரிமைகளுக்கும் மிக முக்கியமான விவகாரங்களை ஆய்வு செய்யும் இத்தகைய உயர்நிலைக் குழுக்களை அரசியல் காரணங்களுக்காக முடக்குவது முற்றிலும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தவெக அரசு மத்திய அரசிடம் மாநில உரிமைகளைத் தாராளமாக விட்டுக் கொடுத்துவிட்டு, பயத்தின் காரணமாகவே இந்த ஆணையத்தின் பணிகளை நிறுத்தியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
