CINEMA
மகனுக்காக விட்டுக்கொடுத்த அப்பா… விஜய்யின் ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு…! பின்னணியில் என்ன நடந்தது..?!
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டை முன்னிட்டு, விஜய் மற்றும் திரிஷா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருப்பாச்சி’யின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 1-ஆம் தேதி ‘திருப்பாச்சி’ திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநியோகஸ்தர்களான திருப்பதி ஃபிலிம்ஸ் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளனர். அப்பா-மகன் படங்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது. புதிய இயக்குநர்களின் படைப்புகளையும், புதிய திரைப்படங்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக விநியோகஸ்தர் தரப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் ‘சிக்மா’ மோதுவதைத் தவிர்க்கவே அப்படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பேரரசுவின் அறிமுக இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘திருப்பாச்சி’ மாபெரும் வெற்றி படமாக அமைந்து பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் திட்டமிட்டபடி அக்டோபர் 2 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் என செய்திகள் பரவி வந்தாலும், தமிழகத்தில் விரைவில் இதற்கான புதிய அதிகாரப்பூர்வ ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 1-ஆம் தேதி ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ‘பத்தா’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அன்றைய தினமே திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
