LATEST NEWS
“பாஜக தலைவர்களின் நெஞ்சைப் பிளந்து பார்த்தாலும்…” வெளுத்து வாங்கிய கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார்..!!
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, மசூதிக்கு முன்பாகப் பட்டாசு வெடிக்கக் கூடாது எனப் பெங்களூரு காவல் ஆய்வாளர் எச்சரித்த விவகாரத்தை முன்வைத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள் மீது அக்கறை இல்லை என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். பாஜக தலைவர்களின் மார்பைப் பிளந்து பார்த்தாலும், அதில் மாநிலத்தின் நலனைக் காக்கும் அம்சம் எதுவும் இருக்காது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கிலேயே எச்சரிக்கை விடுத்தார் என்றும் அவர் நியாயப்படுத்தியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அரசியலமைப்பு பதவியில் இருந்துகொண்டு கண்ணியமில்லாமல், மைசூரு அரச குடும்ப வாரிசான பாஜக எம்பி யதுவீரையும் வீதிக்கு அழைத்து வந்து காவல் நிலையம் முன்பாகப் போராட்டம் நடத்தி, மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் எப்படியாவது அமைதியின்மையை உருவாக்கவே பாஜக விரும்புகிறது என்றும், இந்தச் செயல் இந்தியாவின் நற்பெயரையே பாதிக்கும் என்றும் டி.கே. சிவக்குமார் எச்சரித்துள்ளார். நாட்டின் மீதான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கர்நாடக பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள் என்று கூறிய அவர், தாராளமாக அரசியல் செய்யுங்கள், போராட்டங்களை நடத்துங்கள்; ஆனால் மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
