CRIME
பகீர்..! 2 மாதங்களாகக் காணாமல் போன பெண்.. கரும்பு தோட்டத்தில் எலும்புக்கூடாக மீட்பு… மொபைல் போனால் அம்பலமான பயங்கரம்..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள கௌஜலாகி கிராமத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா என்ற குடும்பப்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். 15 ஆண்டுகளுக்கு முன்பு சித்தப்பா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி காணாமல் போனது குறித்து அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய பெலகாவி காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் இருந்து எலும்புக்கூடாக மாறிய நிலையில் இருந்த அன்னபூர்ணாவின் சடலத்தைக் கைப்பற்றினர்.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் கோகாக் தாலுகா ஷிங்கள் புரா கிராமத்தைச் சேர்ந்த திலீப் கடாகரி என்பவர் இருப்பது தெரியவந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் கட்டுமானப் பணிக்காகக் கௌஜலாகி கிராமத்திற்கு வந்த திலீப், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அன்னபூர்ணாவுடன் அறிமுகமாகி பழகியுள்ளார். திருமணமான திலீப்பிற்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திலீப் தவணை முறையில் வாங்கிய புதிய பைக்கிற்குப் பணம் கட்டுமாறு அன்னபூர்ணாவிடம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அன்னபூர்ணா பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திலீப், கடந்த ஜூலை 23 அன்று அன்னபூர்ணாவை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று மீண்டும் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர முடியாது எனத் தீர்க்கமாகக் கூறியதால், கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அன்னபூர்ணாவின் தங்கச் சங்கிலி, கம்மல் மற்றும் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். அன்னபூர்ணாவின் மொபைல் போன் திலீப்பின் நண்பரிடம் இருப்பதை வைத்துத் துப்புத் துலக்கிய காவல்துறையினர், திலீப்பைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கைதான திலீப் ஹிந்தல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
