CRIME
“என் புருஷனுக்கு ஹார்ட் அட்டாக்” கள்ளகாதலனோடு ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி… அந்தரங்க உறுப்பில் இருந்த அந்த காயம்.. அம்பலமான மனைவியின் நாடகம்..!!
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனை, அவரது மனைவி கள்ளக்காதலன் மற்றும் தாயாருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா (40) என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே இருந்துள்ளார். இவரை கவனிப்பதில் அவரது மனைவி ஷஹீனா பானுவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இவர்களது குடும்ப நண்பரான நஹீம் உத்தின் குரேஷி என்பவர் உதவிக்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, குரேஷிக்கும் ஷஹீனாவிற்கும் இடையே கள்ளக்காதல் உருவாகியுள்ளது.
கணவன் முபாரக் பாஷா தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, அவரைக் கொலை செய்ய ஷஹீனாவும் அவரது கள்ளக்காதலன் குரேஷியும் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த கொலைத் திட்டத்திற்கு ஷஹீனாவின் தாயார் ஹசீனா ஜானுவும் உடந்தையாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு முபாரக் பாஷா தூங்கிக்கொண்டிருந்தபோது, மூவரும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது முபாரக் பாஷா அவர்களை எதிர்த்துப் போராடியதால், ஆத்திரமடைந்த அவர்கள் பாஷாவின் முகம், கன்னம் மற்றும் பிறப்புறுப்புகளில் கொடூரமாகத் தாக்கி, அவர் மூச்சுத்திணறி இறக்கும் வரை சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.
கொலைக்கு பிறகு, முபாரக் பாஷா மாரடைப்பால் இயற்கையாக இறந்துவிட்டதாகக் கூறி ஷஹீனா நாடகமாடியுள்ளார். ஆனால், முபாரக்கின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து சந்தேகமடைந்த அவரது சகோதரர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்த காவல்துறையினர், அது மூச்சுத்திணறலால் ஏற்பட்ட கொலை என்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மனைவி ஷஹீனா பானு, கள்ளக்காதலன் குரேஷி மற்றும் தாயார் ஹசீனா ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
