CRIME
“அடச்சீ… சொந்த பந்தம்னு நம்பி அனுப்புனா இப்படி பண்ணிட்டானே…” 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 17 மாதங்களில் கிடைத்த அதிரடித் தீர்ப்பு…!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் உறவினரான சோமேஷ் யாதவ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சைத்ர நவராத்திரி கன்னி பூஜைக்காகப் பாட்டியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி மர்மமான முறையில் மாயமானார். இதுகுறித்து மோகன் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின்பகுதியில் சிறுமியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் மேற்கொண்ட விரிவான விசாரணை, தடயவியல் மற்றும் மரபணு பரிசோதனைகளின் அடிப்படையில் சிறுமியின் உறவினரான சோமேஷ் யாதவே இக்கொடூர குற்றத்தைச் செய்தது உறுதி செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமையின் போது ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலால் சிறுமிக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டதும், குற்றத்திற்குப் பின் உடலை காரில் மறைத்து வைத்து, கழிவறை சுத்தம் செய்யும் ரசாயனத்தைப் பயன்படுத்தி ரத்தக் கறைகளை அழித்து விசாரணையைத் திசைதிருப்ப முயன்றதும் தெரியவந்தது.
இவ்வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி அனிஷ் துபே, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, இச்சம்பவத்தை “மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு” எனக் குறிப்பிட்டு மரண தண்டனை விதித்தார். குற்றம் நடைபெற்ற 17 மாதங்களுக்குள் விரைவு போக்சோ நீதிமன்றம் மூலம் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
