CRIME
ஒரே வீட்டில் 4 சடலங்கள்… நள்ளிரவில் உறங்கிய மனைவி, 3 மகள்கள்… செங்கலால் தலையை நசுக்கிக் கொன்ற கொடூரத் தந்தை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்புரா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் 3 மகள்களைக் கணவரே செங்கலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதி மக்களிடையே வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூரச் சம்பவத்தில் 40 வயதான கீதா ஜா என்ற பெண்ணும், அவருடைய மகள்களான நந்தினி, கிரிஷா மற்றும் ராதிகா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டில் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது, மறைந்திருந்து வந்த கணவர் ராகுல் ஜா, செங்கலால் அவர்களின் தலையில் அடுத்தடுத்து ஓங்கி அடித்துக் கொலை செய்ததாக ஜெய்ப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை அந்த வீட்டில் எவ்வித நடமாட்டமும் இல்லாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும் சென்று பார்த்தபோதே இந்த நால்வர் கொலை விபரீதம் தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரத்த மாதிரிகள் உள்ளிட்ட முக்கியத் தடயங்களைச் சேகரித்துள்ளனர். மேலும், கொலைக்குக் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் செங்கலையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் நடந்தபோது குற்றவாளியின் 85 வயது முதிய தந்தையும் அதே வீட்டில் இருந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்த விபரீதக் கொலைகள் நடந்திருக்கலாம் என மேற்கு ஜெய்ப்பூர் துணை காவல் ஆணையர் பிரசாந்த் கிரண் சந்தேகம் தெரிவித்துள்ளார். எனினும், கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. கொடூரக் கொலைகளைச் செய்துவிட்டுத் தப்பியோடிய ராகுல் ஜாவை உடனடியாகக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கியச் சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
