CRIME
“குடும்ப மானமே போச்சு டி!” ஆண் நண்பருடன் வீடியோ வைரலானதால்.. பெற்ற மகளையே சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தை.. நடுக்காட்டில் நடந்த ஆவணக்கொலை..!!
அகமதாபாத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், குடும்ப அவமானம் என்று கருதி 22 வயது மகளை சொந்த தந்தையும் சகோதரரும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொடூரமாக ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோஃபியா என்ற அந்த இளம்பெண் மருத்துவமனையில் பணிமுடிந்து திரும்பியபோது, அது ஒரு சாலை விபத்து போல சித்தரிக்கப்பட்டு உயிரிழந்ததாக ஆரம்பத்தில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட ஆணவப்படுகொலை என்பது சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சோஃபியா நிக்கி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது தந்தை முகமது ஃபாரூக் மற்றும் சகோதரர் முகமது ஹபில் ஆகிய இருவருக்கும் சோஃபியாவின் நடத்தை மீது சந்தேகம் இருந்துள்ளது. இதனால் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்கள் இருவரும் சோஃபியாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகச் சிசிடிவி கேமராக்கள் குறைவாக இருக்கும், இருட்டான மற்றும் ஆள் நடமாட்டமில்லாத ஒரு சாலையை அவர்கள் கொலை செய்யத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு, திட்டமிட்டபடி தந்தை ஃபாரூக்கும், சகோதரர் ஹபிலும் சோஃபியாவை மருத்துவமனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழியில் ஹபில் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் சோஃபியாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். அவர் மயக்கமடைந்ததும் கீழே தள்ளி, சோஃபியாவின் மூச்சு நிற்கும் வரை மீண்டும் மீண்டும் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலைச் சாலையோரம் வீசிவிட்டு, இது ஒரு வாகன விபத்து போலக் காட்டுவதற்காக ஹபில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு நாடகமாடியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த வழக்கைச் சாலை விபத்தாகப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் அதற்கான எந்தவொரு தடயமும் இல்லாததால் சந்தேகமடைந்து விசாரணையின் கோணத்தை மாற்றினர். சகோதரர் ஹபிலின் முன்னுக்குப் பின் முரணான பதில்களாலும், சிசிடிவி ஆதாரங்களாலும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், தந்தையும் மகனும் சேர்ந்து இந்த ஆணவக்கொலையை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, சோஃபியாவின் தந்தை ஃபாரூக் மற்றும் சகோதரர் ஹபில் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
