CRIME
“வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..” போதைப்பொருள் தடுப்பு அதிகாரி எனக்கூறி டிஜிபி ஆபீஸ் ஏட்டு ஏழை கடைக்காரரிடம் செய்த பகீர் மோசடி.. பரபரப்பு பின்னணி..!!
சென்னையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.3.30 லட்சம் பணம் பறித்த வழக்கில், டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றும் ரவிவர்மன் என்ற தலைமைக் காவலர் உட்பட இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரது கடைக்கு வந்த ஒரு கும்பல், தங்களைப் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் என அடையாளம் காட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளது. பின்னர், பிரவீன் குமாரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பணத்தைப் பறித்துக்கொண்ட அந்தக் கும்பல், அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு கட்டளையிட்டுள்ளது. சந்தேகமடைந்த பிரவீன் குமார் அவர்களிடம் அடையாள அட்டையைக் கேட்டபோது, அந்த மர்ம நபர்கள் பணத்துடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து பிரவீன் குமார் அளித்த புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையில் துணிகரப் பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத் தலைமைக் காவலர் ரவிவர்மன் என்பது அம்பலமானது. இதையடுத்து, தலைமைக் காவலர் ரவிவர்மன் மற்றும் அவருக்குக் கூட்டாளியாகச் செயல்பட்ட மங்கிலால் ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடிச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற இரு நபர்களைப் பிடிக்கப் போலீசார் தற்பொழுது தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
