CRIME
“யாரவது செத்தா ஸ்கூல் லீவு விடுவாங்கல்லா” நண்பனையே கொலை செய்ய முயன்ற பள்ளி மாணவர்கள்.. நள்ளிரவில் விடுதியில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு குருகுலப் பள்ளியில், பள்ளிக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் தங்கள் அறைத் தோழனைக் (Roommate) கொலை செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விடுதி அறையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில், திட்டமிட்ட சதிப்படி அந்த இரு மாணவர்களும் பாதிக்கப்பட்ட மாணவனின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி அவனது மூச்சை அடைக்க முயன்றுள்ளனர். எனினும், அந்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பித்து, கூச்சலிட்டபடி அறையை விட்டு வெளியே ஓடியதால் அவனது உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது.
இந்தக் கொடூரமான சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதனைப் போலீசாருக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ தெரிவிக்காமல் மூடி மறைக்க தீவிரமாக முயற்சி செய்துள்ளனர். ஆனால், உள்ளூர் மக்களிடையே இந்த விவகாரம் கசிந்ததை அடுத்து, மாவட்டக் கல்வித் துறைக்குத் தகவல் எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வட்டாரக் கல்வி அதிகாரி (MEO) நேரில் வந்து அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியபோதுதான் இந்த பகீர் உண்மை ஒட்டுமொத்தமாக அம்பலமானது.
அதிகாரிகளின் விசாரணையில் அந்த மாணவர்கள், “யாராவது இறந்தால் பள்ளிக்கு நீண்ட நாட்கள் விடுமுறை கிடைக்கும்” என்ற விபரீதமான எண்ணத்திலேயே இச்செயலில் ஈடுபட்டதாகக் ஒப்புக்கொண்டுள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் ஒரு மாணவன் எதிர்பாராத விதமாக இறந்தபோது, பள்ளிக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதை மனதில் வைத்தே இந்த மாணவர்கள் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் மாணவர்களின் தற்போதைய மனநிலை, பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் (Counseling) குறித்த பெரும் கேள்விகளையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
