CRIME
“ஆன்லைன்ல கதை படிச்சா காசு…” ஆசைகாட்டி கோடிகளைச் சுருட்டிய போலி ஆப்.. ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றம்… நீங்களும் இப்படி ஏமாறிடாதீங்க…!!
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில், ஆன்லைனில் கதைகள் மற்றும் நாவல்களைப் படித்துப் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஃபியூச்சர் புக்ஸ் டெக்னாலஜி’ என்ற நிறுவனம், வீட்டில் இருந்தபடியே கதை படிப்பது மூலம் தினசரி வருமானம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளது. ஆரம்பத்தில், இந்தச் செயலியில் இணைய ரூபாய் 18,502 கட்டணமாகப் பெறப்பட்டது. பணத்தைச் செலுத்திய பிறகு, பயனர்களுக்குத் தினமும் 22 டாஸ்க்குகள் கொடுக்கப்படும் என்றும், ஒரு டாஸ்க்கிற்கு ரூ.29 வீதம் ஒரு நாளைக்கு ரூ.638 கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் நிறுவனத்தின் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பிப் பதிவு செய்தனர்.
மக்களை மேலும் ஈர்ப்பதற்காக, நிறுவனம் பிளான் அப்கிரேட் முறையையும் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ.61,600 முதலீடு செய்தால் தினமும் ரூ.2,200 வரை சம்பாதிக்கலாம் என்றும், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் பைக் மற்றும் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் கார் பரிசாக வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டப்பட்டது. அத்துடன், புதிய நபர்களைச் சேர்த்தால் கமிஷன் மற்றும் போனஸ் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகச் சுமார் இரண்டு மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கூறியபடி சரியாகப் பணம் வழங்கப்பட்டது. இதனால் ஈர்க்கப்பட்ட மக்கள், தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இதில் இணையச் வைத்ததோடு, ரூ.18,502 முதல் ரூ.5 லட்சம் வரை பெரிய தொகையை முதலீடு செய்யத் தொடங்கினர்.
ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகப் பயனர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பட்டுவாடா திடீரென நிறுத்தப்பட்டது. சந்தேகமடைந்த மக்கள் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அந்தச் செயலியும் முற்றிலும் முடங்கிச் செயல்படாமல் போனது. அதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர். குறிப்பாகத் தார்வாட் மாவட்டத்தின் கல்ஹட்கி (Kalghatgi பகுதியில் மட்டுமே 6,000-க்கும் மேற்பட்டோர் இந்தச் செயலியில் பதிவு செய்து ஏமாந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் பணத்தை மீட்டுத் தரக் கோரியும், மோசடி செய்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல்துறையை நாடி வருகின்றனர்.
