LATEST NEWS
யாரோடும் பேசாமல் தனிமை… இரவு முழுக்கு மனைவியுடன்… நோய்களின் கொடுமையால் டெல்லி முன்னாள் தலைமைச் செயலாளர் எடுத்த விபரீத முடிவு..!!
டெல்லி அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராகேஷ் மேத்தா, நோய்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நொய்டாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நொய்டா செக்டார்-93ல் உள்ள கேந்திரிய விஹார்-2 சொசைட்டியில் தனியாக வசித்து வந்த இவர், அண்டை வீட்டாருடன் அதிகம் பேசாமல் தனிமையை விரும்புபவராக இருந்துள்ளார். இவரது மனைவியும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுமந்தி மேத்தா, டேராடூனில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். அவர்கள் தனியாக வாழ்ந்தபோதிலும், குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவந்துள்ளனர்.
சம்பவத்திற்கு முந்தைய சனிக்கிழமை இரவு, ராகேஷ் மேத்தா டேராடூனில் இருந்த தனது மனைவியுடன் போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது மனைவி மீண்டும் போன் செய்தபோது, ராகேஷ் மேத்தா அழைப்பை ஏற்கவில்லை. பலமுறை முயன்றும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மனைவி, கேந்திரிய விஹார் சொசைட்டியின் செக்யூரிட்டி கார்டை அழைத்து நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். செக்யூரிட்டி கார்டு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் திறக்க முடியாததால் மாற்றுச் சாவியைக் கொண்டு பூட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ராகேஷ் மேத்தா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு டெல்லியில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. ராகேஷ் மேத்தா எழுதி வைத்திருந்த தற்கொலைக்குறிப்பில், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது முடிவுக்குத் தானே பொறுப்பு என்றும், குடும்பத்தினரை யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அதில் கோரியிருந்தார். இதன் காரணமாகக் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் எனத் தெரிவித்ததால், காவல்துறையினர் தேவையான முறைசார் நடவடிக்கைகளை முடித்து வழக்கை நிறைவு செய்தனர்.
