LATEST NEWS
“வகுப்பறையா? மரணக் குழியா? “பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே இடிந்து விழுந்த கூரை… அரசுப் பள்ளியில் பதறவைக்கும் விபத்து… 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!!
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டே மாவட்டத்திற்கு உட்பட்ட முஸல்லோல்லி தண்டா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வழக்கம்போல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோது வகுப்பறையின் கான்கிரீட் கூரை திடீரென இடிந்து விழுந்தது. புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த 6 மாணவர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த ஆறு மாணவர்களுக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன என்றும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் பாகல்கோட்டே ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி கஜானன் பாலே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி கட்டிடத்தின் சேதமடைந்த பகுதியை உடனடியாக பழுதுபார்க்க பஞ்சாயத்து ராஜ் பொறியியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பள்ளியின் பழமையான மற்றும் மோசமான நிலைமை குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்திருந்த பெற்றோர், கட்டிடத்திற்கு நிரந்தர பழுதுபார்ப்புப் பணிகளையும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
