CRIME
“என்ன கொடுமை இது… மதுபோதையில் அட்டகாசம்…? பெண் பைக்கரை காரால் மோதிவிட்டுத் தப்பிய ஓட்டுநர்…” டேஷ்கேமில் சிக்கிய பகீர் காட்சி..!!
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில் பெண் இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பைக் ரைடர்ஸ் குழுவாகச் சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டில் வந்த கார் ஒன்று பெண் ஓட்டிய பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த பெண் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததுடன், அவரது பைக் சாலையில் உரசிப் பொறிகள் பறக்கச் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த ஒட்டுமொத்த விபத்து சம்பவமும் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்கேமில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் பைக்கரின் பெயர் சியா என்பதாகும். இவர் இன்ஸ்டாகிராமில் ‘rebelwheels_sia_’ என்ற பக்கத்தை நடத்தி வருகிறார். விபத்து நடந்த இந்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், காரில் வந்த நபர்கள் மது போதையில் இருந்ததாகவும், அவர்கள் முதலில் தனது பைக்கை நிறுத்த முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். பைக்கை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் வேண்டுமென்றே மோதிவிட்டுத் தப்பியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சியாவின் நண்பர் அந்த காரைப் பின்தொடர்ந்து சென்று சிக்னலில் மறித்துத் தட்டிக் கேட்டபோதும், கார் ஓட்டுநர் தன் தவறை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்பட்கிறது.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஹரியானா மாநிலப் பதிவெண் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆபத்தான முறையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் குருகிராம் காவல்துறையினரைத் tag செய்து வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து குருகிராம் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
