LATEST NEWS
“கார் இருந்தா டிராஃபிக்.. இல்லனா இதுதான் நிலைமை” 400 ரூபா தாரேன்னு சொல்லியும்… ஐடி நகரம் குருகிராமின் அவல நிலையை வெளுத்து வாங்கிய இளம்பெண்..!!
ஹென்சி சோனி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, குருகிராம் நகரின் தற்போதைய அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. குருகிராம் நகரில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அலுவலகம் செல்பவர்கள் மற்றும் சாமானிய மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
மழைக்காலத்தின் போது குருகிராம் நகரில் நிலவும் பொதுப் போக்குவரத்து மற்றும் ஆன்லைன் கேப் (Cab) தட்டுப்பாடு குறித்து ஹென்சி சோனி அந்த வீடியோவில் விரிவாகப் பேசியுள்ளார். தான் அலுவலகம் செல்வதற்காகக் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கேப் புக் செய்ய முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். வெறும் 8 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்கு 400 ரூபாய் வரை கட்டணம் காட்டினாலும், அதைக் கொடுக்கத் தயாராக இருந்தும் கூட ஒரு கேப் கூட கிடைக்கவில்லை என்று அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/reel/DbrzEOXRIch/?utm_source=ig_web_button_share_sheet
குருகிராமில் லேசான மழை பெய்தால் கூட சாலைகள் உடனே நிரம்பி விடுகின்றன என்றும், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கடுமையான டிராஃபிக்கில் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சொந்தக் கார் இல்லாதவர்கள் கேப் நிறுவனங்களுக்கு அதிகக் கட்டணம் செலுத்தியே திவாலாகி விடுவார்கள் போல என்று அவர் குமுறியுள்ளார். இதற்கிடையே, குருகிராமில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work From Home) வாய்ப்பை வழங்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
