LATEST NEWS
“ச்சே.. தங்கமான மனசுப்பா உனக்கு… கேப் டிரைவர் டயர்டானதை பார்த்து பயணி செய்த செயல்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!
நோய்டாவைச் சேர்ந்த ‘டேவிட்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் சிவ் மிஸ்ரா என்பவர், நோய்டாவில் இருந்து லக்னோவிற்கு செல்வதற்காக ஒரு வாடகை காரை (Cab) முன்பதிவு செய்திருந்தார். பயணத்தின் போது, அந்த காரின் ஓட்டுநர் முந்தைய நாள் முதல் தொடர்ந்து காரை ஓட்டி வந்ததால் மிகுந்த சோர்வுடன் இருப்பதை அவர் கவனித்தார். இதனால், ஓட்டுநரை வற்புறுத்தாமல், அவரே கார் ஸ்டீயரிங்கை கையில் எடுத்து காரை ஓட்டத் தொடங்கினார். மிகவும் களைப்படைந்திருந்த ஓட்டுநர் காரின் பின்சீட்டில் சென்று நிம்மதியாக தூங்கத் தொடங்கினார். இதைப் பதிவு செய்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் பேசும் சிவ் மிஸ்ரா, “நண்பர்களே, நான் இப்போது நோய்டாவிலிருந்து லக்னோவிற்கு பயணம் செய்து கொண்டிருக்கிறேன். நான் கேப் முன்பதிவு செய்திருந்தேன், ஆனால் ஓட்டுநர் நேற்று முதல் தொடர்ந்து கார் ஓட்டி வந்ததால் மிகவும் சோர்வாக இருந்தார். அவர் பின்சீட்டில் தூங்குவதை நீங்கள் பார்க்கலாம். இதுபோன்ற சூழல்களில் ஓட்டுநர் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை. ‘நான் பணம் கொடுத்து முன்பதிவு செய்திருக்கிறேன், அதனால் நீங்கள்தான் காரை ஓட்ட வேண்டும்’ என்று கூறி வற்புறுத்துவதற்குப் பதிலாக, நான் இந்த சூழ்நிலையை ஒரு சாகசப் பயணமாக எடுத்துக்கொண்டு பயணத்தை ரசிக்கத் தொடங்கினேன்” என்று கூறியுள்ளார். தாமதத்திற்காக புகார் அளிப்பதைத் தவிர்த்து, அவர் எடுத்த இந்த சாதகமான முடிவு பலரையும் ஈர்த்துள்ளது.
நீண்ட தூரப் பயணங்களில் சோர்வுடன் கார் ஓட்டுவது பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சிவ் மிஸ்ராவின் இந்த இரக்க குணத்தையும் பொறுப்புணர்வையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “உங்களுக்குப் தங்கமான மனசு சகோதரா”, “மற்றவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல பாடம்”, மற்றும் “முழுமையான நல்ல மனிதர்” என பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், நீண்ட தூரப் பயணங்களில் கேப் ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்களிடம் மக்கள் பரிவோடும் புரிதலோடும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
