CRIME
“கொலை பண்ணா தெரியக்கூடாது… மாரடைப்பு போலக் காட்டுவது எப்படி?” போலீஸையே ஏமாற்ற பிளான்…” கூகுள் சர்ச் ஹிஸ்டரியால் வசமாக சிக்கிய கோடீஸ்வர மருமகள்!
காண்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர மருந்து தொழிலதிபர் வினீத் மினோசா கொலை வழக்கில், அவருடைய மருமகள் ஷாலு மினோசாவின் கூகுள் தேடல் விவரங்கள் மற்றும் மொபைல் சாட்டிங் மூலம் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வினீத் மினோசாவைக் கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ், ஷாலு மினோசா மற்றும் அவருக்கு உதவிய இரண்டு வேலைக்காரர்களை கல்யாண்பூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் நடப்பதற்கு முன்பாக, “ஒருவரைக் கொலை செய்தால் அது கொலையாகத் தெரியாமல் தற்கொலை அல்லது மாரடைப்பு போலக் காட்டுவது எப்படி?” என்று ஷாலு கூகுளில் தேடியது போலிஸாரின் டிஜிட்டல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, தனது மாமனார் வினீத் மினோசாவை சந்தேகம் வராத வகையில் மாரடைப்பு அல்லது தற்கொலை போலக் கொலை செய்ய வீட்டிலிருந்த பழைய வேலைக்காரனுக்கு ஷாலு லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டியுள்ளார். ஆனால் திட்டமிட்டபடி கொலையை நிறைவேற்ற முடியாமல் போனது. வேலைக்காரன் விஷால் மற்றும் அவனது தோழன் ஆகியோர் தாக்குதல் நடத்தியபோது வினீத் எதிர்த்துப் போராடியதால், அவர்கள் அவரைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் நடந்த இரவில் வினீத்தின் மகனும் மருமகள் ஷாலுவும் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகவும், அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்குத் திரும்பிய பின்னரே இக்கொலை வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலைக்கான முதன்மை காரணத்தை ஆராய்ந்தபோது, குடும்பத்தில் நிலவிய தகராறே காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஷாலுவின் மிதமிஞ்சிய செலவுகளை வினீத் கண்காணித்து கண்டித்து வந்ததோடு, அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் வீட்டில் பல சிசிடிவி கேமராக்களையும் பொருத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலு இக்கொலை திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கொலையாளியைக் கண்டுபிடித்த காவல்துறையினர், தற்போது கூகுள் சர்ச் ஹிஸ்டரி மற்றும் மொபைல் சாட்களை வலுவான டிஜிட்டல் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராகி வருகின்றனர்.
