LATEST NEWS
கோவிலுக்குப் போய்விட்டு.. வீட்டுக்கு வந்த மனைவிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்த கணவன்… நடந்தது என்ன..? தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த ஜெயசங்கர் (54) என்பவர், நேற்று மாலை மதுபோதையில் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, ஜெயசங்கர் ஆத்திரத்தில் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டார். அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், கோபித்துக் கொண்ட அவரது மனைவியும் பிள்ளைகளும் கோவிலுக்குச் சென்றுவிட்டனர்.
பின்னர் இரவு 8 மணியளவில் கோவிலில் இருந்து குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் எவ்விதப் பதிலும் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் ஜெயபாரத், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசங்கர் பாயில் சலனமற்று இறந்த நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஜெயசங்கரின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெயசங்கரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
