LATEST NEWS
இணையத்தை உலுக்கிய வீடியோ..! 163 வயது பௌத்த துறவி உயிரோடு மம்மியாக மாறுகிறாரா..? அம்பலமான உண்மை பின்னணி..!
109 வயதான ஒரு முதிய துறவி, காகிதத்தைப் போல மெலிந்து நலிந்த உடலுடன் படுக்கையில் படுத்திருந்த நிலையிலும், தனது கொள்ளுப் பேரக்குழந்தையுடன் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு அவரது பேத்தி தனது டிக்டாக் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டிருந்தார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கிய உடனே, நெட்டிசன்கள் சிலர் கற்பனைக்கு எட்டாத கதைகளை இதனுடன் இணைத்துக் கண்டபடி வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.
அந்தத் துறவிக்கு 163 வயது என்றும், சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று அவருக்கு 399 வயது என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும், அவர் “சுகாஷிம்புட்சு” எனப்படும் பௌத்த மத வழக்கப்படி, உயிரோடு இருக்கும்போதே தன்னைத்தானே மம்மி போல மாற்றிக் கொள்ளும் கடுமையான தியானப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் காட்டுத்தீயாகப் பொய் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த விசித்திரக் கதைகள் பலரையும் நம்ப வைக்கும் வகையில் டிரெண்டாக்கப்பட்டது.
ஆனால், இதற்குப் பின்னால் இருந்த உண்மையான விஷயம் என்னவென்றால், அவர் மற்றவர்களைப் போன்ற ஒரு சாதாரண வயதான முதியவர் மட்டுமே ஆவார். அவர் உடல்நலக்குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட சில நாட்களிலேயே, அதாவது 2022-ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று அவர் இயற்கையெய்தினார். தனது இறுதி நாட்களில் குடும்பத்தினரால் சூழப்பட்டு அரவணைக்கப்பட்ட ஒரு முதியவரின் எளிய கதையை விட, தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விசித்திரமான தோற்றங்களை நம்புவதே மனிதர்களுக்கு எளிதாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
