LATEST NEWS
#BREAKING: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. திடீர் அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் இந்த முப்பெரும் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விழா ஒத்திவைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் தற்போதைக்குத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், முப்பெரும் விழா நடைபெறும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். இந்த திடீர் ஒத்திவைப்பு திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சித் தலைமையின் அடுத்தகட்ட அறிவிப்புக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
