LATEST NEWS
முன்னாள் அமைச்சருக்கு தரிசனம் செய்து வைக்கவா அதிகாரிகள் இருக்காங்க..? சேகர்பாபு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் காட்டம்..!!
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தபோது ஏற்பட்ட விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திருவண்ணாமலை கோவிலில் சேகர்பாபுவுக்கு விஐபி தரிசனம் மறுக்கப்பட்டு, அவர் பொதுவழியில் அனுமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், “முன்னாள் அமைச்சருக்கு தரிசனம் செய்து வைக்கத்தான் அதிகாரிகள் உள்ளார்களா? மக்களுக்கு பணியாற்றத்தான் அதிகாரிகள் இருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவழியில் மக்களோடு மக்களாகச் சென்று சாமி தரிசனம் செய்வதை ஏன் அவமரியாதையாக நினைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ரமேஷ், இது தமிழ்நாட்டில் என்ன புது கல்ச்சராக உள்ளது என்றும் சாடினார். மேலும், “நானே எந்த விஐபி கியூவிலும் செல்வதில்லை; மக்களோடு மக்களாகத்தான் தரிசனம் செய்கிறேன். கடந்த ஆட்சியில் அவர் என்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், பொதுமக்கள் வழியில் சென்றால்தான் அவர்களின் கஷ்டங்கள் புரியும்” என்றும் அவர் எம்பிடி பேசினார்.
இந்த பேட்டியின் போது அரசியல் மற்றும் மின்சார விநியோகம் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாகப் போட்டியிடுவது குறித்து கவலை இல்லை என்றும், தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் இருக்கும்போது இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். மேலும், மின்சாரத்துறை அமைச்சர் தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்துள்ளதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்றும், சிலர் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காகப் போராட்டம் நடத்தி வருவதாகவும் அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
