LATEST NEWS
3,300 கோடிக்கு அதிபதி… ஒரே நாளில் பிச்சைக்காரரான பாஜக எம்.எல்.ஏ.. பணம் போனால் குணம் மாறுமா..? வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்த எம்.எல்.ஏ பராக் ஷா..!!
3,300 கோடி ரூபாய்க்கு அதிபதியான மும்பையைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பராக் ஷா, நாள் முழுவதும் பிச்சைக்காரர் வேடம் தரித்து வீதிகளில் யாசகம் பெற்றுள்ள விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது ஆன்மீகக் குருவின் அறிவுரையை ஏற்று, வாழ்க்கையின் எதார்த்த நிலையைத் நேரில் அறிந்துகொள்வதற்காக அவர் இந்த வினோதமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இந்த விசித்திரப் பயணத்தின் போது, அவர் பிச்சைக்காரர் கோலத்தில் இருந்ததை அறியாத பொதுமக்களில் ஒருவர் அவருக்கு 20 ரூபாய் பணம் கொடுத்து உணவு சாப்பிடுமாறு அன்புடன் கூறியுள்ளார். மேலும், அங்குள்ள ஒரு சமோசா வியாபாரி எவ்வித பாகுபாடும் காட்டாமல் சிரித்த முகத்துடன் அவருக்குச் சமோசா கொடுத்து உபசரித்துள்ளார். இந்த எளிய மனிதர்களின் மனிதநேயம் தனக்கு பெரும் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள எம்.எல்.ஏ. பராக் ஷா, “முன்பு என்னைச் சந்திக்கப் பல மணி நேரம் காத்திருந்தவர்கள், நான் எனது தகுதியையும் அந்தஸ்தையும் இழந்த ஒரு ஏழையாக நின்றபோது, தங்களை என்னை விட உயர்ந்தவர்களாக நினைத்து என்னை அணுகினர்” என்று மனிதர்களின் இரட்டை வேட நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். குருவின் வழிகாட்டுதலால் இந்த சமூகத்தின் உண்மை முகத்தையும், எளிய மனிதர்களின் பெருந்தன்மையையும் தம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது என அவர் பதிவிட்டுள்ளார்.
