LATEST NEWS
“வெளியே சொன்னா உயிரோட கொல்வோம்” சக மாணவிக்கு ‘பேய்’ பிடித்ததாகக் கூறி கற்பூரம் ஏற்றி, துடைப்பத்தால் அடித்த தோழிகள்… கள்ளக்குறிச்சி கல்லூரி விடுதியில் அரங்கேறிய கொடூரம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கி வரும் இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, சக மாணவிகளே சேர்ந்து பில்லி சூனியம், பேய் ஓட்டுதல் என்ற பெயரில் கொடூரத் துன்புறுத்தல் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, கல்லூரியின் விடுதி அறையில் தங்கிப் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த சக மாணவிகள் 4 பேர், அந்த மாணவிக்கு “பேய் பிடித்துள்ளதாகக்” கூறி விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த சில தினங்களாக அந்த நான்கு மாணவிகளும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு கட்டாயப் பேய் ஓட்டும் படலத்தை நடத்தியுள்ளனர். அதன்படி, மாணவியின் உடம்பில் கற்பூரத்தை ஏற்றி வைத்ததுடன், துடைப்பக் கட்டையால் அவரை மிருகத்தனமாக அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்தச் சித்திரவதை குறித்து கல்லூரி நிர்வாகத்திடமோ அல்லது வெளியில் உள்ளவர்களிடமோ கூறினால், உயிரோடு கொலை செய்து விடுவோம்
என்றும் அந்த மாணவிகள் பாதிக்கப்பட்ட மாணவிக்குக் கொலை மிரட்டல் விடுத்து, ரகசியத்தைக் காக்க வற்புறுத்தியுள்ளனர்.
தோழிகளின் இந்தத் தொடர் மனரீதியான மற்றும் உடல்ரீதியான சித்திரவதையைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த மாணவி, இறுதியாகத் தைரியமாகச் சென்று காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். மாணவியின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், விடுதி அறையில் பேய் ஓட்டுவதாகக் கூறி அராஜகத்தில் ஈடுபட்ட சக மாணவிகள் 4 பேர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வியறிவு புகட்டும் பொறியியல் கல்லூரியிலேயே இத்தகைய மூடநம்பிக்கை கொடூரம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
