CRIME
கம்பு காட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சடலம்… தேடிச்சென்ற மகள்களுக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை..!!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி, தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கம்பு பயிரைப் பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை வயலுக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது ஐந்து மகள்களும், அக்கம் பக்கத்தினருடன் இணைந்து வயல்வெளி மற்றும் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இன்று காலை பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்கள் கம்பு காட்டுப் பகுதி வழியே சென்றபோது, அங்கு மூதாட்டி விருதாம்பாள் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் வந்து உடலை மீட்டுப் பார்த்தபோது, மூதாட்டி அணிந்திருந்த தாலிச் செயின், கொலுசு, மூக்குத்தி உள்ளிட்ட தங்க நகைகள் அனைத்தும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நகைக்காகவே மூதாட்டியை மர்ம நபர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் வரஞ்சரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கொலைக்கு நகைக் கொள்ளைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதப் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
