CRIME
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! “உங்க அப்பா இப்படி” மனைவி சொன்ன அதன் ஒரு வார்த்தை… வேதனையில் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்…!!
சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியில், மனைவி திட்டிய கோபத்தில் படுத்த படுக்கையாக இருந்த பெற்ற தந்தையையே மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (68) என்பவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் கடந்த 20 நாட்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இவரை கவனித்து வந்த இவரது பெயிண்டர் மகன் நடராஜன் (45) என்பவர், மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடராஜனின் மனைவி எழிலா பிள்ளைகளுடன் வேளாங்கண்ணிக்குச் சென்றுவிட்டு நேற்று மதியம் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் நடராஜன் மது போதையில் இருக்க, மாமனார் ராஜேந்திரன் படுக்கையிலேயே மலம் மற்றும் சிறுநீர் கழித்த நிலையில் கவனிப்பாரற்று கிடந்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த எழிலா, “உங்க அப்பாவை உங்களால் பார்த்துக் கொள்ள முடியாதா?” என்று கணவரைத் திட்டிவிட்டு அறைக்குள் உறங்கச் சென்றுள்ளார்.
மனைவி திட்டியதால் ஆத்திரமடைந்த நடராஜன், தந்தை படுக்கையில் மலம் கழிப்பதால்தான் தனக்கு இந்த அவமானம் நேரிட்டது என எண்ணியுள்ளார். உடனே சமையலறை கத்தியை எடுத்து வந்து, தந்தை ராஜேந்திரனின் மார்பில் குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மனைவி அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவிக நகர் போலீசார் நடராஜனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
