CRIME
“கர்ப்பிணின்னு கூட பாக்காம” என் முடியை பிடிச்சு இழுத்து பூட்டி வச்சு… உன்னை கொலை பண்ணிடுவோம்னு மிரட்றாங்க… 5 லட்சம் வரதட்சணைக்காக மருமகளை சித்திரவதை செய்த கணவன் குடும்பத்தார்.. கதறும் பெண்…!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில்2024 ஆம் ஆண்டு திருமணமான ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர், கூடுதல் வரதட்சணை கேட்டுத் தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டாரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது புகுந்த வீட்டினர் பெரிய கார் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வரதட்சணையாகக் கேட்ட நிலையில், பெண்ணின் பெற்றோரால் சிறிய காரும் 3 லட்ச ரூபாயும் மட்டுமே கொடுக்க முடிந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் விவரித்துள்ள வாக்குமூலத்தின்படி, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரது முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்று, ஒரு அறைக்குள் பூட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். தான் கர்ப்பிணி என்றும் பாராமல், அடி தாங்க முடியாமல் கதறி அழுதபோதும் அவர்கள் இரக்கமின்றி தொடர்ந்து தாக்கியதாகக் கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று பெரிய கார், 5 லட்சம் ரூபாய் பணம், ஏசி, கூலர், பிரிட்ஜ் உள்ளிட்டப் பொருட்களை வாங்கி வராவிட்டால் உன்னைக் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர்.
கூடுதல் வரதட்சணைக் கொடுமையால் மிகக் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளான அந்தப் பெண், தற்போது நீதி கேட்டு காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தை நேரில் அணுகியுள்ளார். ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணை, வரதட்சணைப் பொருட்கள் குறைவாகக் கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்த புகுந்த வீட்டாரின் செயல் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.
