LATEST NEWS
ஜான் பிரிட்டோவுடன் தொடர்பு..? 1 கோடி ரூபாய் அவதூறு வழக்கில் சிக்கிய திமுக ஐடி விங்… ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அவகாசம்…!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக விசிக அமைச்சரும் தவெக கூட்டணியின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மு.க.ஸ்டாலினுக்கு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் அளித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்வதேசக் குற்றவாளி ஜான் பிரிட்டோ என்பவருடன் ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்புபடுத்தி, திமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் (IT Wing) சமூக வலைத்தள பக்கங்களில் அவதூறான செய்திகளையும் நெட்டிசன் பதிவுகளையும் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், இதன் மூலம் பொதுவெளியிலும் அரசியல் களத்திலும் தனது நற்பெயருக்குக் கடுமையான களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் நற்பெயர் பாதிப்பிற்கும் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும், தனது சமூக வலைத்தள பக்கங்களிலேயே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை வரும் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அதற்குள் திமுக தரப்பு தங்களது விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தவெக கூட்டணிக்கும் திமுகவிற்கும் இடையே ஏற்கனவே அரசியல் மோதல்கள் முற்றியுள்ள நிலையில், இந்த 1 கோடி ரூபாய் அவதூறு வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
