LATEST NEWS
வேண்டவே வேண்டாம் சாமி..! “5 வருஷத்துல உலகமே அழியலாம்” அசுர வேக ஏஐ-க்கு பயந்து அடுத்தடுத்து பதவியை தூக்கி எறியும் ஆராய்ச்சியாளர்கள்.. மேலும் ஒரு ஆராய்ச்சியாளர் ராஜினாமா..!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வேக வளர்ச்சி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்று அஞ்சி, இந்தத் துறையைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகிற்கு மிகப்பெரிய பாதிப்பு அல்லது ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை முன்வைத்து, கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் முக்கிய ஏஐ ஆராய்ச்சியாளரான ஜோஸ் ஏங்கல்ஸ் தற்பொழுது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து, ஏஐ உலகின் முன்னணி நிறுவனங்களான ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ ஆகிய இரண்டிலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த ஆராய்ச்சியாளரான ஜேகப் காக்சன் என்பவரும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்துகளுக்குப் பயந்து கடந்த வாரம் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் முதன்மை மூளைகளே, அதன் கட்டுப்பாடற்ற மற்றும் பாதுகாப்பற்ற வளர்ச்சியைப் பார்த்துக் அச்சமடைந்து வெளியேறுவது தொழில்நுட்ப உலகில் விவாதங்களை உசுப்பியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் அதீத ஆற்றல் மனித இனத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று பேரழிவை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உலகளாவிய ரீதியில் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளதை இந்த அடுத்தடுத்த ராஜினாமாக்கள் உறுதிப்படுத்துகின்றன. ஏஐ நிறுவனங்கள் வணிக லாபத்திற்காகப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு அசுர வேகத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே இவர்களின் இந்த அச்சத்திற்குக் முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
