LATEST NEWS
“MLA சரவணன் மீது தப்பில்லை என எப்படி கூறலாம்?” அமைச்சர் சட்டமன்றத்தில் சொன்னது முற்றிலும் பொய்… அமைச்சர் ஆனந்தின் பதிலுக்கு பாதிக்கப்பட்ட பெண் பகிரங்க மறுப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, “அவர் மீது எந்தத் தவறும் இல்லை” என்று அமைச்சர் ஆனந்த் பதிலளித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது தவறு இல்லை எனப் புலன் விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது முற்றிலும் பொய் என்று அந்தப் பெண் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது பேட்டியில், தான் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் மனு தொடர்பாகப் காவல்துறையினரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரை தன்னிடம் எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரிடமே விசாரணை நடத்தாமல், குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அமைச்சர் சட்டமன்றத்தில் தவறான தகவலைத் தந்துள்ளார் என அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த விளக்கமும், அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள மறுப்பும் தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
